×

படகில் கடத்தி வரப்பட்ட ரூ2.7 கோடி கஞ்சா பறிமுதல்


ராமேஸ்வரம்: தமிழகத்தில் இருந்து பாக் ஜலசந்தி கடல் வழியாக படகில் கடத்தப்பட்ட ரூ 2.70 கோடி மதிப்பிலான கஞ்சா பார்சல்களை இலங்கை கிளிநொச்சி போலீசார் கைப்பற்றினர். அதேபோல் இலங்கை நீர்கொழும்பு பகுதியில், ரூ.20 லட்சம் மதிப்பிலான கெண்டு இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர். இலங்கை கிளிநொச்சி பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்துள்ளது. அன்று இரவில் கிளிநொச்சி பாரதிபுரம் பகுதிக்கு மோப்ப நாயுடன் சென்ற போலீசார் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். இதில் வீட்டின் உள்ளே மேற்கூரை பகுதியில் காட் போர்டு அடைப்புக்குள் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பார்சல்களை போலீசார் கைப்பற்றினர். பார்சலுக்குள் 65 கிலோ எடையில் கஞ்சா இருந்தது. இலங்கையில் இதன் மதிப்பு 2.70 கோடி ரூபாய் ஆகும்.

இது குறித்த முதற்கட்ட விசாரணையில், தமிழக கடலோரப் பகுதியில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்தி வரப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. கஞ்சாவை பறிமுதல் செய்த கிளிநொச்சி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுபோல் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் நீர்கொழும்பு கடல் பகுதியில் கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடலில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த இரண்டு படகுகளை வழிமறித்து சோதனை செய்தனர். இதில் படகின் அடியில் பதுக்கி வைத்திருந்த 35 மூட்டைகளை கைப்பற்றி, பிரித்து பார்த்தனர். அதன் உள்ளே 1,143 கிலோ எடையில் பீடி சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கெண்டு இலைகள் இருந்தது. இலங்கையில் இதன் மதிப்பு ரூ.20 லட்சமாகும்.

கைப்பற்றப்பட்ட கெண்டு இலைகள் தமிழகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக படகில் இலங்கைக்கு கடத்தி வரப்பட்டது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு படகுடன், கெண்டு இலைகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் படகில் இருந்த நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த நான்கு இலங்கையர்களையும் கைது செய்தனர்.

The post படகில் கடத்தி வரப்பட்ட ரூ2.7 கோடி கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Tamil Nadu ,Pak Strait ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் அடுத்துள்ள குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயம்!